ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-போர்னோ கோரிக் ஆகியோர் மோதுகின்றனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜோகோவிச்சும், நான்காம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவும் மோதினர். இதில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார்.
நடப்பாண்டில் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் சின்சினாட்டி ஓபன் போட்டிகளில் ஜோகோவிச் வென்று அபார பார்மில் உள்ளார்.
பெடரர் அதிர்ச்சி: மற்றொரு அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரரும்-குரோஷியாவின் போர்னோ கோரிக்கும் மோதினர். இதில் 21 வயது வீரர் கோரிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். நடப்பாண்டில் பெடரர் ஆஸி. ஓபன் போட்டியில் மட்டுமே வென்றார். யுஎஸ் ஓபனில் நாக் அவுட், விம்பிள்டனில் காலிறுதியோடு வெளியேறினார் பெடரர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-கோரிக் மோதுகின்றனர்.