யூத் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக தடகளத்தில் ஆடவர் 5000 மீ நடை ஓட்டத்தில் இந்திய வீரர் சூரஜ் பன்வர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆர்ஜென்டீனாவின் பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளன. தடகளத்தில் 4 கி.மீ நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (கிராஸ் கண்ட்ரி) தவிர ஏனைய பந்தயங்களில் இறுதிச் சுற்று நடத்தப்படவில்லை. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவும் இருமுறை நடத்தப்பட்டு, இரு சுற்றுக்களின் முடிவுகள் இறுதியாக கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இந்தியாவின் 17 வயது பன்வர், இரு சுற்றுகளையும் சேர்த்து 40: 59: 17 நிமிட நேரத்தில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி வென்றார்.
ஈக்குவடார் நாட்டின் ஆஸ்கர் தங்கத்தையும், பியுர்டோ ரிக்கோவின் ஜேன் மொரே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இது இந்த யூத் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும்.
குத்துச்சண்டையில் ஜோதி தோல்வி
மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவில் பங்கேற்ற ஓரே இந்திய வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜோதி குலியா 0-5 என்ற புள்ளிக்கணக்கில் காலிறுதிச் சுற்றில் இத்தாலியின் மார்ட்டினா பியானாவிடம் வீழ்ந்தார்.
கடந்த 2010 யூத் ஒலிம்பிக்கில் தான் குத்துச்சண்டையில் இந்தியா தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தது.