தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏர்டெல் ஹாஃப்மாரத்தான் பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர்கள் முதலிடம் பெற்றனர்.
14-ஆவது முறையாக நடைபெறும் இம்மாரத்தான் பந்தயத்தில்பல்வேறு வயது பிரிவுகளில் 34000 பேர் பங்கேற்று ஓடினர். நேரு விளையாட்டரங்கம் மற்றும் ஜெய் சிங் மார்க் பகுதியில் பந்தயத்தை தடகள வீரர் அதில் சுமரிவாலா, கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தொடங்கி வைத்தனர்.
ஆடவர் எலைட் பிரிவில் எத்தியோப்பிய வீரர்கள் அன்டம்லாக் பெலிஹு, ஆம்டெவொர்க் வாலெஜன் ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர். பெலிஹு கடந்த ஆண்டு பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மகளிர் பிரிவில் எத்தியோப்பிய வீராங்கனை டிஹே கெமன்சு 1:06:50 மணி நேரத்தில் ஓடி முதலிடம் பெற்றார். தற்போதைய உலக சாதனையாளர் ஜாய்சீலின் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று முறை ஒலிம்பிக், 5 முறை உலக சாம்பியனான திருநேஷ் டிபாபா பாதி ஓட்டத்தின் போதே மயக்கமுற்றார்.
இந்தியர்களுக்கான பந்தயத்தில் ஆடவர் பிரிவில் அபிஷேக் பால் முதலிடமும், மகளிர் பிரிவில் சஞ்சீவனி ஜாதவும் முதலிடம் பெற்றனர்.
எலைட் பிரிவில் முதலிடம் வென்ற எத்தியோப்பிய வீரர்களுக்கு 27 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், இந்திய வீரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு தரப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ.3, ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது.