இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி செயல்பட்ட ஸ்டுவர்ட் பிராட்டுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்டை பிராட் போல்டாக்கினார். அப்போது, ஐசிசியின் விதிகளுக்கு புறம்பாக பிராட் ஆக்ரோஷமாக செயல்பட்டார். இது ஐசிசியின் விதி 2.1.7 -இன் படி குற்றமாகும்.
இதனால், அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதிக்கு ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், லெவன் 1-இன் படி ஒரு டிமெரிட் புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் போட்டி நடுவர்கள் குழு விதித்த இந்த உத்தரவை பிராட் ஏற்றுக்கொண்டார்.
இந்த போட்டியின் 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 1 விக்கெட்டும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்கள் தேவை என்ற நிலையும் உள்ளது.