தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஜம்முவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி சுற்றுக்கு முன்பு வரை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் 9.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் ஆர்.ஜி. கிருஷ்ணாவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததையடுத்து 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தேசிய செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் அரவிந்த் சிதம்பரம். 9 புள்ளிகளுடன் கடைசி சுற்றை எதிர்கொண்ட வைபவ் சூரி, ஸ்ரீஜித் பாலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தார். இதனால் அவரால் முதலிடம் பிடிக்கமுடியாமல் போனது.
கடந்த இரு தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அரவிந்த் சிதம்பரத்தால் 2-ம் இடத்தையே பிடிக்கமுடிந்தது. இந்நிலையில் அவருக்கு இந்த வருடம் சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டத்தை அவர் முதல்முறையாக வென்றுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், 8 வயதில் தந்தையை இழந்துள்ளார். அதன்பிறகு செஸ் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்த சென்னைக்கு மாறினார். 2011 முதல் அரவிந்த் சிதம்பரத்துக்கு பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் பயிற்சியளித்து வருகிறார். 2015-ல் 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் அரவிந்த் சிதம்பரம்.