இலங்கைக்கு எதிராக சதமடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தில்லி ஐபிஎல் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 2-வது டெஸ்டில் அபார சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார் கேப்டன் ஜோ ரூட்.
இதையடுத்து தில்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள செளரவ் கங்குலி, ரூட்டின் சதத்தைப் பாராட்டியதோடு அவர் தில்லி அணிக்குத் தேர்வாகவேண்டும் என்கிற விருப்பத்தையும் ஒரு ட்வீட் வழியே தெரிவித்துள்ளார். தில்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டாலை தனது ட்வீட்டில் டேக் செய்துள்ளார் கங்குலி.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ரூ. 1.50 கோடி அவருடைய அடிப்படை விலையாக இருந்தது. 2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரூட், 8 சர்வதேச டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ஒருநாள் அணியின் முக்கிய வீரராகவும் உள்ளதால் அவர் டி20 ஆட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.
இந்நிலையில் டிசம்பர் 18 அன்று ஐபில் ஏலம் நடைபெறவுள்ளது. கங்குலியின் பரிந்துரைக்குப் பிறகு, ஜோ ரூட்டை தில்லி அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.