காயம் காரணமாக ஷிகர் தவன் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கான மாற்று வீரராக ரிஷப் பந்த் புதன்கிழமை இங்கிலாந்துக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார்.
எனினும், உலகக் கோப்பை போட்டியில் தவன் தொடர்வது தொடர்பாக அணி நிர்வாகம் இறுதி முடிவு எடுக்கும் வரையில் அவர் தவனுக்கான மாற்றுவீரராக அணியிர் சேர்க்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்படாததை அடுத்து பலமான விவாதங்கள் எழுந்த நிலையில், தற்போது மாற்று வீரராக அவர் அணியில் சேர அழைக்கப்பட்டுள்ளார்.
அணி நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் தவனுக்கான மாற்று வீரராக நியமிக்கப்படும் ரிஷப் பந்த், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக இங்கிலாந்து வந்தடைவார் என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவன் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரை இங்கிலாந்திலேயே இருக்கச் செய்வதெனவும், அவரது நிலையை தொடர்ந்து கண்காணிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அணி புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.