2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கான தொடர்பான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டார் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாடினி.
பிரான்ஸ் கால்பந்தில் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்பவர் பிளாடினி. மூன்று முறை தங்கக் கால்பந்து விருதைப் பெற்றவர். கடந்த 2015-இல் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) தலைவராக பிளாடினி இருந்த போது, 2022 உலகக் கோப்பை போட்டியை கத்தார் நாட்டுக்கு வழங்குவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டார் என புகார் எழுந்தது.
மேலும் முன்னாள் பிஃபா தலைவர் செப் பிளாட்டரிடம் இருந்தும், பெருந்தொகையை லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து செப் பிளாட்டர் பிஃபா தலைவர் பதவியில் இருந்தும், யுஇஎப்ஏ தலைவர் பதவியில் இருந்து பிளாடினியும் நீக்கப்பட்டனர். கால்பந்து உலகில் எந்த நிகழ்விலும் பங்கேற்க பிளாடினிக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு கத்தார் பெருந்தொகையை லஞ்சமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரெஞ்சு ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் பிளாடினியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இது சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.