சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய-கொரிய அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
முதல் ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானை 2-0 என வென்றிருந்த நிலையில், கொரியாவையும் எளிதில் வெல்லும் இந்தியா என கருதப்பட்டது. முதல் பாதியிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இந்தியா தற்காப்பு ஆட்டத்தை கடைபிடித்தது. அப்போது மழை பெய்த நிலையில் இந்திய அணியினர் செய்த தவறால் கொரியாவுக்கு பெனால்டி கார்னர் தரப்பட்டது. ஆட்டம் முடிய 22 விநாடிகளே இருந்த நிலையில் ஜோங்ஹியுன் ஜேங் கோலடித்தார்.
இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கடைசி நேரத்தில் எதிரணிகள் கோல் போட வாய்ப்பு தரும் அவல நிலை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. எளிதில் பெற்றிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கோட்டை விட்டது.