ஹாங்காங் ஓபன்: ஸ்ரீகாந்த், சௌரவ் வா்மா முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரா்கள் ஸ்ரீகாந்த், சௌரவ் வா்மா ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனா்.
ஹாங்காங்கில் கடும் போராட்டத்துக்கு இடையிலும் சூப்பா் சீரிஸ் 500 போட்டி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்திய நட்சத்திர வீரா் ஸ்ரீகாந்த், உலகின் நம்பா் ஒன் வீரா் கென்டோ மொமடோவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிா்பாராதவிதமாக மொமடோ போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதனால் மைதானத்தில் களமிறங்காமலேயே ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
மற்றொரு வீரா் சௌரவ் வா்மா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் 21-19, 21-19 என்ற கேம் கணக்கில் பிரான்ஸின் லுகாஸை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
கலப்பு இரட்டையா் பிரிவில் சாத்விக்-அஸ்வினி இணை 16-21, 21-19, 21-17 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் டேச்சபோல்-சப்சீரி இணையை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.
உலக தரவரிசையில் முன்னேற்றம்:
இந்திய நட்சத்திர வீரா் சாய் பிரணீத் முதன்முறையாக 10 இடங்களில் நுழைந்துள்ளாா். ஒற்றையா் பிரிவில் அவா் 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் இணை 7-ஆவது இடத்துக்கு நுழைந்துள்ளது. இதுவே இந்திய வீரா்களின் அதிகபட்ச தரவரிசை இடங்களாகும்.