டூ பிளெஸ்ஸிஸ் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தாலும், எதிர்காலத்தைக் கருதி குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தற்காலிக இயக்குநர் நாக் வே கூறியுள்ளார்.
அவர் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கேப்டனாகவும், ஒரு வீரராகவும் டூபிளெஸ்ஸிஸ் அணியின் செயல்பாட்டில் முக்கிய பங்காற்றி உள்ளார். அவர் இன்னும் டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறார். மேலும் எதிர்காலத்தைக் கருதியும், டி காக் தலைமைப் பண்புகள் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக நியமித்துள்ளோம்.
இந்திய அணி பலமானதாக உள்ள நிலையில், டி20 தொடர் எங்கள் அணி குறித்து மதிப்பிட உதவும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அடித்தளமிட இந்த தொடர் உதவும். அதற்கு முன்னதாக 20 ஆட்டங்களில் எங்கள் அணி ஆட உள்ளது. அனுபவம், இளமை கலந்த அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது.
தொடரை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உள்ளோம். அதன் சொந்த மண்ணில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்தது என்பதை அறிவோம் என்றார் நாக்வே.