ஹீரோ சூப்பர் கோப்பை 2019 போட்டியில் பங்கேற்காத ஐ லீக் அணிகள் மீது நடவடிக்கை பாயும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த ஏஐஎப்எப் சார்பில் ஐ லீக் மற்றும் ஐஎஸ்எல் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐ லீக் போட்டியைக் காட்டிலும் ஐஎஸ்எல் கூடுதல் நிதி மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்டதாக அதிக வரவேற்புடன் திகழ்கிறது.
இரு லீக் போட்டிகளிலும் ஆடும் அணிகள் பங்கேற்கும் ஹீரோ சூப்பர் கோப்பை போட்டி தனியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஏஐஎப்எப் தங்கள் பாரபட்சமாக நடத்துகிறது எனக் கூறி ஐ லீகைச் சேர்ந்த மோகன்பகான், ஈஸ்ட்பெங்கால், சர்ச்சில் பிரதர்ஸ், அய்சால், மினர்வா எஃப்சி, கோகுலம் எஃப்சி, நெரோகா எஃப்சி உள்ளிட்ட அணிகள் ஹீரோ சூப்பர் கோப்பை போட்டியை புறக்கணித்து விட்டன.
இதனால் சூப்பர் கோப்பை போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஐ லீக் அணிகள் புறக்கணிப்பால் ஏஐஎப்எப்புக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை வரும் 13-ஆம் தேதி நடைபெறும் லீக் மற்றும் ஒழுங்குமுறை கமிட்டி கூட்டத்தில் வைக்கப்படும். சூப்பர் கோப்பை விதி 10.4இன்படி அந்த அணிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் போட்டி அறிவிக்கப்பட்டபின் அதில் இருந்து விலகிய அணி தான், இதனால் ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்ய வேண்டும். அடுத்த சீசன் போட்டியில் பங்கேற்க முடியாமல் தடை விதிக்கப்படும். ஏஐஎப்எப் செயற்குழு இப்பிரச்னை தொடர்பாக தடையை நீடிப்பது குறித்து முடிவு செய்யும்.
ஏற்கெனவே சூப்பர் கோப்பை போட்டிகளை மாற்ற அமைக்க வேண்டும் என்ற ஐ லீக் அணிகள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.