ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் 800 மீ. ஓட்டத்தில் கோமதி மாரிமுத்துவும், குண்டு எறிதலில் தஜிந்தர் சிங்கும் தங்கப் பதக்கம் வென்றனர்.
டோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2 நிமிடம் .2.70 விநாடி நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை முந்தி கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர் சிங் 20.22 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றார்.
மேலும் அவர் செப்டம்பர் மாதம் டோஹாவில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டிக்கும் தேர்வு பெற்றார்.
மகளிர் 400 மீ. தடை தாண்டுதலில் 24 வயதான சரிதாபென் கெய்க்வாட் 57.22 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஆடவர் 400 மீ. தடை தாண்டுதலில் ஜபிர் மாதாரி 49.13 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஜபிரும் உலக தடகளப் போட்டிக்கு தேர்வானார்.
டுட்டி சந்த் மீண்டும் சாதனை: 100 மீ. தேர்வுச் சுற்றில் டுட்டி சந்த் 11.26 விநாடிகளில் கடந்து, தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்தார். எனினும் உலக சாம்பியன் போட்டி தகுதி அளவான 11.24 விநாடிகளை இன்னும் எட்டவில்லை டுட்டி. திங்கள்கிழமை நிலவரப்படி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.