ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய பவர்லிப்டிங் சாம்பியன் போட்டி மகளிர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண் தங்கப் பதக்கம் வென்றார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பல் மருத்துவரான ஆர்த்தி, தேசிய, தென்னிந்திய, மாநில அளவில் பவர்லிப்டிங்கில் பல்வேறு வெற்றிகளை குவித்தவர். கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்றஅகில இந்திய பெடரேஷன் கோப்பை பவர்லிப்டிங் சாம்பியன் போட்டியில் எம்-1 பிரிவில் முதலிடத்தை வென்றார். மேலும் பல்வேறு தேசிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய சாம்பியன் போட்டியில் சிறந்த பளுதூக்கும் வீராங்கனை விருதையும் வென்றார் ஆரத்தி.
தேசிய போட்டியில் அவரது சிறந்த செயல்பாட்டுக்காக இந்திய அணியில் இடம் பெற்றார்.
ஹாங்காங்கில் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஆசிய பவர்லிப்டிங் சாம்பியன் போட்டியில் பங்கேற்ற அவர் 72 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய அணியில் 27 ஆடவர், 9 மகளிர் என மொத்தம் 36 பேர் இடம் பெற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக காமன்வெல்த் பவர்லிப்டிங் போட்டியிலும் ஆர்த்தி பங்கேற்கவுள்ளார்.