மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 2-வது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 279 ரன்களைக் குவித்தது. கேப்டன் கோலி 120, ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களை விளாசினர்.
மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு மே.இ. தீவுகள் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் மே.இ. தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லூயிஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தோனி போல ரிஷப் பந்தும் 5-ம் நிலை, 6-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டியவர். அவருடைய இயற்கையான ஆட்டம் அதற்குப் பொருந்தும். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 40 ஓவர்கள் வரை விளையாடினால், அப்போது வேண்டுமானால் பந்தை 4-ம் நிலை வீரராகக் களமிறக்கலாம். ஆனால் 30-35 ஓவர்கள் விளையாடவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் ஐயரைதான் நான் பரிந்துரைப்பேன். பிறகு 5-ம் நிலை வீரராக பந்த் களமிறங்கலாம். விராட் கோலியுடன் இணைந்து விளையாடும்போது ஸ்ரேயஸ் ஐயர் நிறைய கற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார்.