நான் இன்னும் ஓய்வு பெறவில்லை: கிறிஸ் கெயில் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில்... 
நான் இன்னும் ஓய்வு பெறவில்லை: கிறிஸ் கெயில் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில் தான் இன்னும் அந்த முடிவை எடுக்கவில்லை என கெயில் கூறியுள்ளார்.

இந்தியா - மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள் அணி. கெயில் 72, லூயிஸ் 43 ரன்கள் எடுத்தார்கள்.

மழையின் குறுக்கீடு காரணமாக இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷ்ரேயஸ் ஐயர், 41 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அட்டகாசமாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.  

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் கெயில் இதை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் இன்னும் என்னுடைய ஓய்வை அறிவிக்கவில்லை. நான் இன்னமும் மே.இ. தீவுகள் அணி வீரராகவே உள்ளேன் என்று கூறியுள்ளார். நேற்று தன்னுடைய 301-வது ஒருநாள் ஆட்டத்தை விளையாடிய கெயில், 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 301 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட உடையை அணிந்து விளையாடினார். ஆட்டமிழந்தபிறகு தன்னுடைய ஹெல்மெட்டை பேட்டில் வைத்தபடி நடையைக் கட்டினார். கெயிலுக்கு இந்திய கேப்டன் கோலியும் இதர இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். இதனால் அதுவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டம் என எண்ணப்பட்டது. ஆனால் பேட்டியின் வழியாக அதை மறுத்துள்ளார் கெயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com