மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கவேண்டும் என்கிற கோரிக்கை பல வருடங்களாக உள்ளது. கடந்த வருடம் பல நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற கண்காட்சி டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மகளிர் ஐபிஎல் குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:
இதில் உள்ள அடிப்படைச் சிக்கலைப் புரிந்துகொள்ளவேண்டும். நிறைய கிரிக்கெட் வீராங்கனைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அடுத்த நான்கு வருடங்களில், சிறந்த வீராங்கனைகள் கொண்ட ஏழு ஐபிஎல் அணிகள் சாத்தியமாகலாம். உள்ளூர் கிரிக்கெட் சங்கங்கள், பலமான அணிகளை உருவாக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிசிசிஐயும் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மூன்று வருடங்கள் கழித்து, 150-160 வீராங்கனைகள் கைவசம் இருக்கும்போது ஐபிஎல் போட்டியை ஆரம்பிக்கலாம். இப்போது நம்மிடம் 50-60 வீராங்கனைகள் மட்டுமே உண்டு. பிசிசிஐயின் நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை உயரும் என்று கூறினார்.