மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தனக்கு உதவிய சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரை தான் தேடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார். எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கைத் தடுப்பு பற்றி கூறிய ஆலோசனைக்குப் பின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார்.
சச்சினுக்கு அவ்வாறு ஆலோசனை வழங்கியது நான் தான் என சென்னையைச் சேர்ந்த குரு பிரசாத் பதில் அளித்துள்ளார். சச்சின் என் வீட்டுக்கு வருகை தரவேண்டும் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தாஜ் ஹோட்டல் நிர்வாகம் சச்சினின் கோரிக்கைக்குப் பதில் அளித்து ட்வீட் செய்துள்ளது. சச்சின் அருகே ஒருவர் நின்றிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தாஜ் நிர்வாகம் ட்வீட் செய்ததாவது:
சென்னையில் எங்கள் ஹோட்டலில் தங்கியிருந்தபோது எங்களுடைய ஊழியருடன் ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சச்சின். நீங்கள் தேடும் நபரை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். உங்கள் இருவரையும் சந்திக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளது. எனினும் சச்சினுடன் உரையாடிய தாஜ் ஹோட்டல் ஊழியரின் பெயரை அந்நிர்வாகம் வெளியிடவில்லை.