பூரான், போலார்ட் அதிரடி அரைசதம்: இந்தியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!

இந்தியாவுடனான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது.
பூரான், போலார்ட் அதிரடி அரைசதம்: இந்தியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!


இந்தியாவுடனான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலக, நவ்தீப் சைனி அறிமுக நாயகனாகக் களமிறங்கினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லீவிஸ் மற்றும் ஷை ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் லீவிஸ் முதல் விக்கெட்டாக 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹோப்பும் 42 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ராஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரோன் ஹெத்மயர் ஆகியோர் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணையும் நல்ல நிலையில் விளையாடி வர 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்தது. 

அறிமுக நாயகனின் இரட்டை அடி:

இந்நிலையில், இந்திய அணியின் அறிமுக நாயகனான நவ்தீப் சைனி முதலில் ஷிம்ரோன் ஹெத்மயர் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து சேஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். சேஸ் 48 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

இணைந்த கைகள்:

144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகளை சரிவில் இருந்து மீட்க நிகோலஸ் பூரானும், கேப்டன் கைரன் போலார்டும் இணைந்தனர். இந்தக் கூட்டணி தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டியது. அதன்பிறகு, சரவெடியாய் ரன் குவிக்கத் தொடங்கியது.

இதனால், மேற்கிந்தியத் தீவுகளின் ரன் வேகமும் சீராக இருந்து வந்தது. இந்நிலையில் பூரான் 43 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதைத் தொடர்ந்து 5-வது விக்கெட் பாட்னர்ஷிப்பும் வெறும் 83 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது. இதனால், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்தது.

ஆட்டத்தின் கடைசி கட்டம் எட்டியதால் இருவரும் டாப் கியருக்கு மாறி பவுண்டரிகளில் ரன்களை உயர்த்தி வந்தனர். 

இந்நிலையில், அரைசதம் அடித்த பூரான் 48-வது ஓவரில் ஷர்துல் தாகுர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 64 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதன்பிறகும், அதிரடி காட்டி இன்னிங்ஸை முடிக்க நினைத்த கேப்டன் போலார்ட் 44 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அவர் மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸையும் அதிரடியாக முடித்த வைத்ததன் மூலம் அந்த அணி 300 ரன்களைக் கடந்தது.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. போலார்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 74 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணித் தரப்பில் சைனி 2 விக்கெட்டுகளையும், தாகுர், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com