இது எதிர்பாராத திருப்பம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல்முறையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில், முதல் நாளன்று இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துக் கெளரவமான நிலையில் இருந்தது. ஆனால் நேற்று அந்த அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல இந்தமுறையும் மே.இ. அணிக்கு நல்ல தொடக்க அமைந்தது. 57 ரன்கள் வரை விக்கெட் விழாமல் இருந்தது. பிராத்வெயிட் 12 ரன்களில் ஆட்டமிழந்தபோது அது ஒரு பெரிய சரிவின் தொடக்கமாக இருந்தது. நடுவரிசை வீரர்கள் வந்தவேகத்தில் கிளம்பியதால் 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது மே.இ. அணி. விக்கெட் கீப்பர் டெளரிச் 38 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு காப்பாற்றினார். இறுதியில் மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாளின் முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இரு டெஸ்டுகளில் தோற்றதால் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி, 3-வது டெஸ்டை வெல்லும் நிலையில் உள்ளது.