முன்னாள் இந்திய வீரரும், தில்லி கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவருமான அமித் பண்டாரியை தாக்கியது தொடர்பாக இளம் வீரர் அனுஜ் தேதா மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார்.
23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற கொதிப்பில் அனுஜ் தேதா தனது தரப்பு ஆள்களுடன் சென்று அமித் பண்டாரியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, அனுஜ் தேதா அவரது சகோதரர் நரேஷ் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செயின்ட் ஸ்டீபன் மைதானத்தில் நடைபெற்ற அணித் தேர்வின் போது, அமித் பண்டாரி தாக்கப்பட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனுஜ் தேதாவுக்கு கிரிக்கெட் ஆட வாழ்நாள் தடை விதிக்கப்படும் என டிடிசிஏ தலைவர் ரஜத் சர்மா தெரிவித்துள்ளார்.