2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் தகுதி பெற உதவும் வகையில் சர்வதேச அழைப்பு நடை ஓட்ட பந்தயம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக இந்திய தடகள சம்மேளன செயலாளர் சி.கே.வல்சன் கூறியதாவது:
2020 டோக்கியோ ஒலிம்பிக், வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலக சாம்பியன் போட்டிகளில் 20 கி.மீ, மற்றும் 50 கி.மீ தூரப் பந்தயங்களில் இந்தியர்கள் தகுதி பெறுவதற்கான அளவுகோலை எட்ட இது உதவும்.
ஆசிய அளவில் சீனா, ஜப்பான் போன்றவை நடை ஓட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. அவர்களுடன் போட்டியிடுவடு நமது அணிக்கு சிறந்த வாய்ப்பாகும். இந்திய முதல்நிலை வீரர்கள், சீனா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் இரண்டாம் கட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் 20 வயதுக்குட்பட்டோர் 20 கி.மீ ஆடவர், மகளிர், தேசிய சாம்பியன் போட்டி 50 கி.மீ (ஆடவர் மட்டும்), 18 வயதுக்குட்பட்டோர் சிறுவர், சிறுமியர் 10 கி.மீ பந்தயங்களும் நடக்கின்றன.
சர்வதேச பந்தயம் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் பந்தயம் 16-ஆம் தேதியும், ஆடவர் தேசிய போட்டி 17-ஆம் தேதியும் நடக்கிறது.
கே.டி.இர்பான், மணிஷ் சிங் ராவத், ஏக்நாத் சம்பாஜி, சந்தீப்குமார், ரவீனா, செளமியா பேபி, சாந்திகுமாரி உள்பட முக்கிய வீரர்கள் பங்கேற்கின்றனர்.