காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சேவாக் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் தெரிவித்துள்ளார். அவர்களது இழப்பை நாம் ஈடு செய்ய முடியாது. நமது வீரர்களின் அனைத்து குழந்தைகளையும், ஜஜ்ஜாரில் உள்ள சேவாக் சர்வதேச பள்ளியில் சேர்த்து படிப்புச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என தனது சுட்டுரை (டுவிட்டரில் ) பதிவிட்டுள்ளார்.