டி20 கூட இல்லை, ஒருநாள் ஆட்டத்துக்குக்கூட புஜாராவைச் சீந்துவதில்லை. இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் புஜாரா.
இந்தூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய செளராஷ்டிர அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய புஜாரா 61 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். இதையடுத்து டி20 போட்டியில் சதமடித்த முதல் செளராஷ்டிர வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய ரயில்வே அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. தொடக்க வீரர்கள் மிருனாள் 20 பந்துகளில் 49 ரன்களும் பிஎஸ் சிங் 40 ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
செளராஷ்டிர அணி தோல்வியடைந்தாலும் புஜாரா டி20 ஆட்டத்தில் சதமடித்திருப்பது இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.