கிரிக்கெட் ரசிகர்கள் சிட்னியில் புஜாரா வெளிப்படுத்திய ஆட்டத்தைப் பாராட்டுகிறார்கள். ஆனால், புஜாராவின் சதத்தை முழுமையாகக் காணமுடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார் அவருடைய தந்தை அரவிந்த். சிட்னி டெஸ்ட் தொடங்கிய முதல் நாளன்று மருத்துவ சிகிச்சைக்காக அவர் ராஜ்கோட்டிலிருந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதனால் புஜாராவின் சதம் அடித்த இன்னிங்ஸை அவரால் முழுமையாகக் காணமுடியவில்லை.
68 வயது அரவிந்த், சிறுவயது முதல் புஜாராவுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தவர். முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர். வியாழன் அன்று திடீரென அவருடைய இதயத் துடிப்பு அதிகமானதால் சிகிச்சைக்காக மும்பைக்குச் செல்லவேண்டியிருந்தது. பந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரவிந்துக்கு இதயச்சிலாகை செலுத்தல் (CARDIAC CATHETERISATION) என்கிற சிகிச்சைமுறை அளிக்கப்பட்டது. புஜாராவின் மனைவியும் உடனிருந்து உதவிகள் செய்துள்ளார். சமீபத்தில் அவருக்குக் குழந்தை பிறந்ததால் புஜாராவுக்குத் துணையாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. முதல் நாள் ஆட்டம் முடிந்தபிறகு தனது தந்தைக்கான சிகிச்சை குறித்து மருத்துவரிடம் ஆலோசித்துள்ளார் புஜாரா. பிறகு தன் தந்தைக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
என் மகன் விளையாடியதை உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். புஜாராவின் பேட்டிங்கில் உள்ள சந்தேகங்கள் எல்லாம் தற்போது தீர்ந்திருக்கும். வீட்டுக்குச் சென்று புஜாரா பேட்டிங்கின் விடியோவைப் பார்ப்பேன் என்று கூறியுள்ளார் புஜாராவின் தந்தை.