சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டத்துடன் புதிய சாதனை படைத்தார். இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏஐபிஏ) அண்மையில் வெளியிட்ட தரவரிசையில் 1700 புள்ளிகளுடன் உலகின் முதல்நிலை வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் மேரி.
36 வயதான மேரிகோம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாததால் 51 கிலோ பிரிவில் மோத வேண்டும்.
3 குழந்தைகளுக்கு தாயான கோம், கடந்த 2018-இல் காமன்வெல்த், போலந்தில் தங்கம், பல்கேரிய போட்டியில் வெள்ளி வென்றிருந்தார்.
57 கிலோ பிரிவில் சோனியா லெதர் 2-ஆம் இடத்திலும், 51 கிலோ பிரிவில் பிங்கி ஜங்ரா, 54 கிலோ பிரிவில் மனிஷா மெளன் 8ஆம் இடத்திலும், 64 கிலோ பிரிவில் சிம்ரஞ்சித் கெளர் 4-ஆம் இடத்திலும், 69 கிலோ பிரிவில் லவ்லினா 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.