மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னனி நட்சத்திரங்களான சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னை எதிர்கொண்டார். இதில், சாய்னா நேவால் 21-14, 21-16 என எளிதில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா நேவால் தனது காலிறுதிச் சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஸோமி ஓகுஹாராவை எதிர்கொள்ளவுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஹாங்காங் வீரர் வின்சென்டை எதிர்கொண்டார். இதன் முதல் சுற்றை 23-21 என போராடி வென்ற ஸ்ரீகாந்த், 2-ஆவது சுற்றில் 8-21 என தோல்வியடைந்தார். இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது சுற்று நடைபெற்றது. இதில், இரு வீரர்களும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், ஸ்ரீகாந்த் கடைசி நேரத்தில் 21-18 என வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இவர் காலிறுதிச் சுற்றில், கொரியாவின் சான் வான் ஹோவை எதிர்கொள்ளகிறார்.
பாருபள்ளி காஷ்யப் வெளியேற்றம்
மற்றொரு நட்சத்திர இந்திய வீரரான பாருபள்ளி காஷ்யப் இன்று தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேஷிய வீரர் அந்தோணியை எதிர்கொண்டார். இதில், அந்தோணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் சுற்றை அந்தோணி 21-17 என கைப்பற்றினார். தொடர்ந்து, நடைபெற்ற 2-ஆவது சுற்றையும், அந்தோணி 25-23 என கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், பாருபள்ளி காஷ்யப் மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.