இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் ஆட்டங்களுக்கு அஜிங்கிய ரஹானே மற்றும் அங்கித் பானே ஆகியோர் இந்திய ஏ அணிக்கு கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையில் ஒரு நாள் தொடர் 23-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடந்து வரும் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகளின் ஒரு பகுதியாக நாக் அவுட் சுற்று (ரவுண்ட் 16) ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் வியத்நாம்-ஜோர்டான் அணிகள் மோதுகின்றன. அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்து-சீனா அணிகள் மோதுகின்றன.
சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜார்ஜியாவின் கிராண்ட்மாஸ்டர் பன்ட்சுலையாவிடம் போராடி தோல்வியுற்றார் சென்னை வீராங்கனை ஜே.சரண்யா.
உலகக் கிரிக்கெட் அரங்கிலேயே தற்போது மிகவும் அபாயகரமான யார்க்கரை வீசும் திறன் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு தான் உள்ளது என பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சு வேறாக இருக்கும் என்றார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மிசோரம் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதுச்சேரி அணி சாதனை படைத்தது. முதலில் ஆடிய புதுவை 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது (சந்தியா மவுனிகா 107), பின்னர் ஆடிய மிசோரம் அணி 31 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியுற்றது.