நாகையில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிகளில், தஞ்சை மண்டலம் 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டி நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 90 அணிகளாகப் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில், 14 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் என்ற 3 பிரிவுகளின் கீழ், ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை காலை நடைபெற்றன. இதில், 3 பிரிவுகளில் தஞ்சாவூர் மண்டல அணி முதலிடம் பெற்றது. திருநெல்வேலி, சேலம், ஈராடு மாவட்ட அணிகள் தலா ஒரு பிரிவில் முதலிடம் பெற்றன. அதன் விவரம் :
ஆடவர் பிரிவு: 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் திருநெல்வேலி மண்டல அணி முதலிடம் பெற்றது. தஞ்சாவூர், திருச்சி மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன. 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தஞ்சாவூர் மண்டல அணி முதலிடம் பெற்றது. சென்னை, திருநெல்வேலி மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன. 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தஞ்சாவூர் மண்டல அணி முதலிடம் பெற்றது. கோவை, திருச்சி மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன.
மகளிர் பிரிவு: 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் சேலம் மண்டல அணி முதலிடம் பெற்றது. பெரம்பலூர், தஞ்சாவூர் மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன. 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தஞ்சாவூர் மண்டல அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல், கோவை மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன. 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஈரோடு மண்டல அணி முதலிடம் பெற்றது. ராமநாதபுரம், திருச்சி மண்டல அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பெற்றன.
நாகை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா. சிவா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், விளையாட்டுப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.