வரும் 17 முதல் 22ஆம் தேதி வரை கட்டாக்கில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளை நடத்துவது தொடர்பாக இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், மாநில சங்கத்துடன் ஒடிஸா மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் மேலும் வளர்ச்சி பெறும் என முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
17 வயதே ஆன காமன்வெல்த் மற்றும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன் மானு பாக்கர், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்துள்ளார். அவர் நேரடியாக கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டதால் எந்த பின்னடைவும் இல்லை என ஒலிம்பிக் பதக்க வீரர் ககன் நரங் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிருப்தி இருந்தாலும், சாதனைகள் புரிய காமன்வெல்த் போட்டியை மட்டுமே சார்ந்திருக்காமல், ஒலிம்பிக் போன்ற இதர சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கனடாவின் கால்கேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சாய் பிரணீத், எச்எஸ்.பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை.