எகிப்து தலைநகர் கெய்ரோவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஆப்பிரிக்க நேஷன்ஸ் கால்பந்து கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் அல்ஜீரியா-செனகல் அணிகள் மோதுகின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஆலோசகராக முன்னாள் வீரர் நரேந்திர ஹிர்வானி நியமிக்கப்பட்டுள்ளார். 17 டெஸ்ட், 18 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள ஹிர்வானி, வரும் செப்டம்பர் மாதம் உள்ளூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவுள்ள தொடரில் இருந்து பணிபுரிவார்.
இந்திய தடகளத்துக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவுக்கு சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் மூத்த வீராங்கனை என்ற சிறப்பு கெளரவத்தை அறிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்கவுள்ள ஏஏஎஃப்ஐ பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்க உஷாவுக்க அழைப்பு தரப்பட்டுள்ளது.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் அறிவித்துள்ளார். வரும் 21-ஆம் தேதி இதற்கான தேர்தல் நடக்கிறது.
ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 4 நாடுகள் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் வடகொரியா-தஜிகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-சிரியா அணிகள் தோல்வியுற்று வெளியேறின.