டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர்.
கடந்த 2010-ல் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது ஆமிர் 5 ஆண்டு தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2016-ல் அணிக்குத் திரும்பினார். நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் சேர்க்கப்பட்டார். முகமது அமிர் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியபோது அவருக்கு வயது 18. அவர் அப்போது 14 டெஸ்ட், 15 ஒரு நாள் போட்டி, 18 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். பிறகு 2016-ல், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
இந்நிலையில் 27 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென இன்று அறிவித்துள்ளார் முகமது அமிர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் என்னால் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தமுடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிற சமயத்தில் பாகிஸ்தான் தேர்வுக்குழு நன்குத் திட்டமிடுவதற்காக என்னுடைய ஓய்வைத் தற்போது அறிவித்துள்ளேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் அமிர்.
முகமது அமிர், இதுவரை விளையாடிய 36 டெஸ்டுகளில் 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.