55 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்கிறது.
பயங்கரவாத தாக்குதல்கள் உள்பட பல்வேறு பிரச்னைகள் எதிரொலியாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகள் இடையே டேவிஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.
பதற்றம் காரணமாக இந்திய அணி அங்கு சென்று விளையாடுமா என கேள்விக்குறி எழுந்தது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 14, 15 தேதிகளில் இஸ்லாமாபாதில் நடைபெறும் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என பிடிஎப் துணைத் தலைவர் முகமது காலித் தெரிவித்துள்ளார். இறுதியாக கடந்த 1964-இல் லாகூரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 4-0 என்ற செட் கணக்கில் வென்றிருந்தது.
பின்னர் 2006-இல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ஆடியிருந்தது. பாகிஸ்தானிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன என ஐடிஎப் கூறியுள்ளது.
இதற்கான அணி வரும் ஆக. 5-ஆம் தேதி அறிவிக்கப்படும். இத்தாலிக்கு எதிராக களமிறங்கிய அணியை போலவே இந்த அணியும் அமையும். பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், யூகி பாம்ப்ரி, சுமித் நாகல், ரோஹன் போபண்ணா, துவிஜ் சரண் ஆகியோர் இடம் பெறலாம். இஸ்லாமாபாதில் புல்தரை மைதானத்தில் போட்டி நடக்கவுள்ளது. இதில் வெல்லும் அணி 2020 தகுதி ஆட்டங்களுக்கு முன்னேறும்.