இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் 2-ஆவது போட்டி நாக்பூரில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 116 ரன்கள் குவித்தார். விஜய் ஷங்கர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
251 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்ச் 37, கவாஜா 38, ஹேண்ட்ஸ்கோம்ப் 48, ஸ்டோய்னிஸ் 52, கேரி 22 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கிச் சென்றனர்.
இந்நிலையில், 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, விஜய் ஷங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தனது 500-ஆவது வெற்றியை பதிவு செய்தது.