வரும் 2020-இல் 17 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த பிஃபா அனுமதி அளித்துள்ளது.
மியாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஃபா கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2017-இல் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக மகளிர் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு தரப்பட்டுள்ளது. இதனால் இந்திய மகளிர் கால்பந்துக்கு புதிய உத்வேகம் பிறக்கும்.
தேசிய அணிக்கு சர்வதேச அனுபவம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் தொடக்க ஆட்டத்தில் ஆடும் எனத் தெரிகிறது. கடந்த 2018-இல் உருகுவேயில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஸ்பெயின் இறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோவவை வென்றது. நியூஸிலாந்து, கனடா முறையே 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.
இதுதொடர்பாக 17 வயது ஆடவர் உலகக் கோப்பை இயக்குநர் சேவியர் செப்பி கூறுகையில்-இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இந்திய மகளிர் கால்பந்துக்கு உன்னதமான நிலை ஏற்படும் என்றார்.