கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணியினர் சனிக்கிழமை நாடு திரும்பினர்.
டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்ற வங்கதேச அணியினர் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வந்தனர்.இந்நிலையில் கிறைஸ்ட்சர்ச்சில் சனிக்கிழமை மூன்றாவது டெஸ்ட் தொடங்க இருந்தது. இதை முன்னிட்டு அந்நகரில் உள்ள அல்நூர் மசூதியில் தொழுகை நடத்த வெள்ளிக்கிழமை வங்கதேச கிரிக்கெட் அணியினர் வாகனத்தில் சென்றனர்.
அப்போது அங்கு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக வங்கதேச வீரர்கள் உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, தொடரும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் வங்கதேச அணி வீரர்கள் சனிக்கிழமை கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பினர். சென்ட்ரல் ஹோட்டலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.