தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டியில் தொடர்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியது இந்தியா.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதிச் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை நடப்பு சாம்பியன் இந்தியா-நேபாளம் இடையே நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதலே இந்திய மகளிர் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது அபார ஆட்டத்தை நேபாளத்தால் எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
இந்திய தரப்பில் தலிமா சிப்பர், கிரேஸ், அஞ்சு தமங் ஆகியோர் கோலடித்தனர். நேபாள தரப்பில் சபித்ரா ஆறுதல் கோலை அடித்தார்.
பயிற்சியாளர் மேமோல் ராக்கி இடையில் சந்தியாவுக்கு பதிலாக அஞ்சு தமங்கை ஆட பணித்தது பலனைத் தந்தது. 78-ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார் அஞ்சு.
இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்ற இந்தியா தொடர்ந்து 5-ஆவது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 23 ஆட்டங்களில் வென்று சாதனை படைத்துள்ளனர் இந்திய மகளிர்.