ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா வெள்ளிப் பதக்கத்தையும், வீரர் சத்யன் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
மஸ்கட்டில் ஐடிடிஎப் சேலஞ்ச் பிளஸ் ஓபன் போட்டிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் 15-ஆம் நிலை வீரர் ஸ்வீடனின் மேட்டியாஸ் பிளாக்குடன்-சென்னை வீரர் சத்யன் மோதினார். இதில் 8-11, 11-7, 9-11, 11-9, 9-11, 11-9, 10-12 என்ற கேம் கணக்கில் போராடி தோல்வியுற்ற சத்யன், வெண்கலப் பதகத்தை கைப்பற்றினார்.
காலிறுதியில் பிரான்ஸ் வீரர் இம்மானுவேலை வென்றிருந்தார் சத்யன்.
அர்ச்சனா காமத்:
21 வயது மகளிர் பிரிவில் அர்ச்சனா காமத் இறுதிச் சுற்றில் 7-11, 8-11, 6-11 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் முதல்நிலை வீராங்கனை சட்சுஸி ஓடோவிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிர் சீனியர் பிரிவில் மதுரிகா பத்கர், ரித்தி சங்கர் ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.
அதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்யன்-சரத்கமல் இணை காலிறுதியில் ரஷிய இணை டெனிஸ் இவோனின்-விளாதிமிரிடம் தோல்வி கண்டது.