தில்லி கேபிடல்ஸ் அணியை வெல்லுமா நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை போராடி தான் சிஎஸ்கே வெல்ல முடிந்தது.
70 ரன்களில் பெங்களூரை சுருட்டினாலும், பின்னர் ஆடிய சென்னை அணியால் எளிதான இலக்கான 71-ஐ அடைய 18 ஓவர்கள் வரை ஆட வேண்டியிருந்தது.
இதற்கு சென்னை சேப்பாக்கம் மைதான பிட்சை கேப்டன்கள் தோனி, கோலி குறை கூறியிருந்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிட்ச்களை அமைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாக அமைந்தது சேப்பாக்கம் மைதான பிட்சின் செயல்பாடு. எனினும் தனது முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்தோடு உள்ளது சென்னை அணி.
அதே நேரத்தில் தில்லி டேர் டெவில்ஸ், தனது அணியின் பெயரை தில்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டு பலம் வாய்ந்த மும்பையை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது. இதில் அதன் இளம் வீரர் ரிஷப் பந்த் அபாரமாக ஆடி 27 பந்துகளில் 78 ரன்களை விளாசி தில்லி வெல்ல உதவினார்.
பந்த் மீண்டும் சாதிப்பாரா?
தில்லி மைதானத்தின் பிட்சும் மெதுவாக பந்துவீசுவோருக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் உதவியாக அமையும் என்பதால், சென்னை அணியினர் இந்த வாய்ப்பை பயன்படுத்துவர். தில்லி அதிரடி வீரர் ரிஷப் பந்த் சுழற்பந்து வீச்சை ஆடுவதில் சிரமப்படுவார் எனத்தெரிகிறது.
முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்கி விட்டு, ரிஷப் பந்த்துக்கு எதிராக ஹர்பஜன், தாஹிரை களமிறக்குவார் தோனி எனக் கருதப்படுகிறது.
சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தில்லி மைதானத்தில் எளிதாக ரன்குவிப்பில் ஈடுபடுவர் என்பதால், தனது பிரதான பந்துவீச்சாளர்கள் டிரென்ட் பௌல்ட், இஷாந்த் சர்மா சீராக பந்து வீச வேண்டும் என தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது.