உலகக் கோப்பையை கைப்பற்ற எந்த அணிக்கு வாய்ப்பு?: கங்குலி பதில்

வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
உலகக் கோப்பையை கைப்பற்ற எந்த அணிக்கு வாய்ப்பு?: கங்குலி பதில்


வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
அட்வான்ஸ்டு ஹேர் ஸ்டூடியோ சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர்,  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்து பேசியதாவது:
உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி வலிமையாக உள்ளது. கோலி தலைமையிலான அந்த அணியில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தோனி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர ஆட்டக்காரர்கள் உள்ளனர்.
இம்முறை பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேவேளையில், அதை அறுதியிட்டுக் கூறும் வகையில் தற்போதைய சூழல்கள் இல்லை.
ஏனெனில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து என அனைத்து அணிகளுமே சமபலத்துடன் விளங்குகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் சமீபகாலமாக பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
எனவே, எந்த அணி உலகக் கோப்பையை கைப்பற்றப்போகிறது என்பதை தீர்மானிப்பது கடினம். இதேபோன்ற சூழல் 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நிலவியது. தற்போது மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் உள்பட பல்வேறு போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விளையாட்டி விட்டு உடனடியாக உலகக் கோப்பையில் பங்கேற்பதால் அவர்கள் சோர்வடையக் கூடும் எனக் கருத்துகள் நிலவுகின்றன. அதை நான் ஏற்கமாட்டேன். ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்து ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பிறகே உலகக் கோப்பை தொடங்கவுள்ளது.
எனவே, வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. கிரிக்கெட் மட்டுமல்ல, கால் பந்தாகட்டும்; டென்னிஸாகட்டும்,  வேறு எந்த விளையாட்டு போட்டியாக இருந்தாலும், அதில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பதுதான் சிறந்தது. மாறாக, தேவையற்ற ஓய்வு அவர்களைத் தொய்வடையவே செய்யும் என்றார் கங்குலி.
இந்தச் சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் மொஹித் சர்மா,  அட்வான்ஸ்டு ஹேர் ஸ்டூடியோ நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குநர் சங்கேத் ஷா, அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com