இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
ரோம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை ஆட்டங்கள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டன. இந்நிலையில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஜோவோ சூஸாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
உலகின் இரண்டாம் நிலை வீரர் நடால் 6-0, 6-1 என்ற செட்கணக்கில் பிரான்ஸின் ஜெரேமி சார்டியை எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல்நிலை வீரர் ஜோகோவிச் 6-1, 6-3 என்ற செட்களில் டெனிஸ் ஷபலபோவையும், பெர்ணான்டோ வெர்டாஸ்கோ 4-6, 6-4, 7-5 என்ற செட்களில் 5-ஆம் நிலை வீரர் டொமினிக் தீமையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
3-ஆம் சுற்றில் ஒஸாகா
மகளிர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் டொமினிக்கா சிபுல்கோவாவை வென்றார். கார்பைன் முகுருஸா 6-4, 4-6, 6-2 என அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வென்றார்.
கிகி பெர்டென்ஸ் 6-2, 4-6, 7-5 என அமென்டாவையும் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.