நீ நீயாக இரு: விராட் கோலி உருக்கமான பதிவு!

ஒன்றைப் புரிந்துகொள் - நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள்...
நீ நீயாக இரு: விராட் கோலி உருக்கமான பதிவு!

இன்று இந்திய கேப்டன் விராட் கோலியின் 31-வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தன்னுடைய இள வயது கோலிக்குப் பதிவொன்றை எழுதியுள்ளார். 15 வயது சிக்கு-வுக்கு (விராட் கோலியின் செல்லப் பெயர்) அவர் எழுதிய பதிவில் கூறியதாவது:

முதலில் உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உன் எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என எனக்குத் தெரியும். என்னை மன்னித்து விடு. பல கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. அடுத்து என்ன நடக்கப் போவது என்பது தெரியாமல் இருக்கும்போது ஒவ்வொரு சவாலில் இருந்தும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், சேருமிடத்தை விடவும் பயணமே முக்கியம். மற்றும் அந்தப் பயணம் அபாரம். 

விராட், வாழ்க்கையில் உனக்கு அபார விஷயங்கள் காத்திருக்கின்றன. உன் வழியில் வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள நீ தயாராக இருக்கவேண்டும். உனக்குக் கிடைக்கும் எதையும் அலட்சியமாக எண்ணாதே. எல்லோரையும் போல நீயும் தோல்வியடைவாய். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவேன் என உறுதி கொள். முதல் முறை முடியாமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய். 

உன்னைப் பலர் விரும்புவார்கள், பலர் வெறுப்பார்கள். உன்னைப் பற்றித் தெரியாதவர்களும் வெறுப்பார்கள். அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதே. உன் மீது நம்பிக்கை வை. 

உன் பிறந்தநாளுக்குத் தந்தை பரிசளிக்காத ஷூவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பாய் என எனக்குத் தெரியும். உன் உயரம் குறித்து அவர் அடித்த நகைச்சுவை, இன்று காலை உன்னைக் கட்டிப் பிடித்தது ஆகியவற்றுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமில்லை. இதைக் கொண்டாடு. சில நேரங்களில் அவர் கண்டிப்பாக இருப்பார் என எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் உன்னிடமிருந்து சிறந்த செயல்களையே விரும்புகிறார். நம் பெற்றோர் நம்மைச் சில நேரங்களில் புரிந்துகொள்வதில்லை என நீ எண்ணுவாய். ஒன்றைப் புரிந்துகொள் - நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களை நீயும் விரும்பு. மரியாதை கொடு. உன் நேரத்தை அவர்களுடன் செலவிடு. உன் தந்தையிடம் நீ அவரை விரும்புவதாகக் கூறு. இன்னும் அதிகமாக என்று. இன்று இதைச் சொல். நாளையும் சொல். அடிக்கடி சொல். 

கடைசியாக, உன் மனம் என்ன சொல்கிறதோ அதற்கேற்றபடி உன் கனவை நோக்கிச் செல். அன்பாக இரு. பெரிதாகக் கனவு காண்பது எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்து. நீ நீயாக இரு. 

அந்தப் பரோட்டாக்களை அனுபவித்துச் சாப்பிடு. வருங்காலங்களில் அது பெரிய விஷயமாக இருக்கும். 

விராத்

ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்கு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com