இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் டி20 ஆட்டத்துக்கு ஏற்றாற்போல ஆடவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் வந்துள்ளது. முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கரும் தவனின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. காற்று மாசு இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச வீரா் முஷ்பிகுா் ரஹிம் அதிரடி ஆட்டத்தால் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
அடுத்த இரு ஆட்டங்களிலும் சரியாக விளையாடா விட்டால் ஷிகர் தவனின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்படும். 40-45 ரன்களை அதே எண்ணிக்கையிலான பந்துகளில் எடுத்தால் அணிக்குப் பயன் இல்லை. இதை அவர் யோசிக்கவேண்டும். சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு வீரர் மீண்டும் அணிக்குள் திரும்பும்போது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்ப சில காலம் தேவைப்படும்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறபோது நிறைய பந்துகளை வீணடிக்கிறோம். தில்லி டி20 ஆட்டத்தில் 55 பந்துகளில் ஒரு ரன்னும் எடுக்கவில்லை. இது மிக அதிகம்.
இந்திய அணி தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ளது. 2,3 இடங்களுக்கு உயர வேண்டுமென்றால் பெரிய அணிகளுடனான ஆட்டங்களில் வெல்ல வேண்டும். அதைச் செய்யாவிட்டால் இந்திய அணியால் டி20 உலகக் கோப்பையை வெல்வது கடினம் என்று கூறியுள்ளார்.