இன்று இறுதி டி20: தொடரை கைப்பற்ற இந்தியா-வங்கதேச அணிகள் தீவிரம்

இறுதி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் வங்கதேச-இந்திய அணிகள் உள்ளன.
இன்று இறுதி டி20: தொடரை கைப்பற்ற இந்தியா-வங்கதேச அணிகள் தீவிரம்

இறுதி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் வங்கதேச-இந்திய அணிகள் உள்ளன.
இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன. இதன் தொடர்ச்சியாக இறுதி ஆட்டம் நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம், இறுதி ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 7 ஓவர்களில் 59 ரன்கள் என சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த அந்த அணி, மிடில் ஆர்டர் பேட்டிங் சிதைவால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட குறைந்த ஸ்கோரையே பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சஹல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினர். பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்களை விளாசி தனது அணி அபார வெற்றி பெற உதவினார். 
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் நாக்பூர் பிட்ச்: சுழற்பந்து மற்றும் மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு ஒத்துழைக்கும் நாக்பூர் பிட்ச், வங்கதேச அணியினருக்கு உதவும் எனக் கருதப்படுகிறது. 
அந்த அணி நிர்வாகத்தின் முக்கிய கவலையே பேட்டிங் ஆகும். சிறப்பான தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் திணறுகின்றனர். 
முஷ்பிகுர் ரஹிம் தவிர வேறு எந்த வீரரும் அரைசதத்தை தாண்டவில்லை. இதனால் வலுவான இந்தியாவின் ஆட்டத்துக்கு ஈடுதர வேண்டிய கடமை வங்கதேச வீரர்களுக்கு உள்ளது.
ராஜ்கோட் வெற்றியால் நம்பிக்கை: தில்லி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும், அதில் இருந்து மீண்டு, ராஜ்கோட்டில் அபார வெற்றி பெற்றது இந்தியா. கேப்டன் ரோஹித்தின் அபார ஆட்டம், சுழற்பந்து பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு போன்றவை நம்பிக்கை அளித்தாலும், வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்காதது கவலை தருகிறது. இதனால் கலீல் அகமதுவுக்கு பதிலாக சர்துல் தாகுர் இறுதி ஆட்டத்தில் களமிறக்கப்படலாம்.
இரு ஆட்டங்களிலும் கலீல் ரன்களை வாரி வழங்கியுள்ளார் 1/37, 0/44.
ரோஹித் மீது சுமை: அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத் தரும் சுமை கேப்டன் ரோஹித் சர்மாவின் மீதே உள்ளது. மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவன், அடித்து ஆட முயன்றாலும், பெரியளவில் ஜொலிக்கவில்லை. அவர் தனது பொறுப்பை உணர்ந்து ஆடுவாரா என அணி நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. 
ராஜ்கோட் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சஹல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோர் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தினர். 
ரோஹித் சர்மா: நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை. குறிப்பாக பவுலர்கள். எனது கையில் மட்டை இருந்தால், சிறப்பாக ஆடுவதே நோக்கமாக கொண்டுள்ளேன். 
இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்து, அடுத்த மே.இ.தீவுகள் உடனான முழு தொடரையும், 2 டெஸ்ட் ஆட்டங்களையும் ஆட வேண்டும். 2019-ஆம் ஆண்டு இதுவரை சிறப்பானதாக உள்ளது.
மஹ்முத்துல்லா: ராஜ்கோட் மைதானம் சிறப்பாக அமைந்தது. மேலும் 25 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றிவாய்ப்பு கிட்டியிருக்கும். ரோஹித், தவனுக்கு இந்தியாவின் வெற்றியில் பெரிய பங்கு இருந்தது. நாக்பூரில் நிலவும் சூழலை கணித்து ஆட வேண்டும்.
நாக்பூரில் வானிலை தெளிவாக இருக்கும். இம்மைதானத்தில் நடைபெற்ற 11 டி20 ஆட்டங்களில் முதலில் ஆடிய அணிகள் 8 ஆட்டங்களில் வென்றுள்ளன.

இன்றைய ஆட்டம்
இந்தியா-வங்கதேசம்
இடம்: நாக்பூர்,
நேரம்: இரவு 7.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com