ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதோடு இன்னும் கூடுதலாக இரு வருடங்களுக்குத் தான் விளையாட வாய்ப்புள்ளதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.
30 டெஸ்டுகள் விளையாடிய பிறகு 2011 ஏப்ரலில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா. பிறகு 226 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய பிறகு இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் எனக் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
எனினும் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
டி20-யில் நான்கு ஓவர்கள் வீசினால் போதும். என்னிடமுள்ள திறமையைக் கொண்டு டி20 பந்துவீச்சாளராக என்னால் சமாளிக்க முடியும். உலகம் முழுக்க நடைபெறும் பல டி20 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளதால் ஒரு கேப்டனாக என்னால் மேலும் இரு ஆண்டுகள் விளையாட முடியும் என எண்ணுகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு நான் தான் கேப்டனாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.