இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 சர்வதேச ஆட்டம், டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறும்படி அட்டவணையைத் தயாரித்திருந்தது பிசிசிஐ. ஆனால், 1992 டிசம்பர் 6 அன்று உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு நினைவு தினமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6 அன்று, இந்தியா முழுக்க எவ்வித அசம்பாதவிதச் சம்பவங்களும் நேராமல் தடுப்பதற்கும், அமைதியை உறுதிசெய்யவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன.
இந்நிலையில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெற்றால் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என மும்பைக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மூன்றாவது டி20 நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத்துக்கு முதல் டி20 ஆட்டத்தையும் மும்பைக்கு மூன்றாவது டி20 ஆட்டத்தையும் ஒதுக்கியுள்ளது பிசிசிஐ. இந்தப் புதிய மாற்றத்தின்படி, இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று ஹைதராபாத்திலும் டிசம்பர் 11 அன்று மும்பையில் 3-வது டி20 ஆட்டமும் நடைபெறவுள்ளன.