ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை அலிஸா ஹீலி டி20 கிரிக்கெட்டில் 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே வென்ற நிலையில், இன்று (புதன்கிழமை) 3-வது மட்டும் கடைசி டி20 ஆட்டம் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 226 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலிஸா ஹீலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை அலிஸா ஹீலி படைத்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 133 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை ஹீலி முறியடித்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் அலிஸா ஹீலி தனது 25-வது பந்தில் அரைசதத்தையும், 46-வது பந்தில் சதத்தையும் எட்டினார். இதில், 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையடுத்து, இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அதேசமயம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 எனவும் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்குகிறது.