ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக தமிழக அணி 50 ஓவர்களில் 360 ரன்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபினவ் முகுந்த சிறப்பாக விளையாடி 139 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 93 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார். ஆனால் இவ்விருவரின் பங்களிப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அதிரடியாக விளையாடி தமிழக அணியின் ஸ்கோரை 360-க்கு உயர்த்தினார் தினேஷ் கார்த்திக். 28 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது.
குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இதற்கு முன்பு விளையாடிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.