புரோ கபடி லீக் 2019 போட்டி பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக புதன்கிழமை தபாங் தில்லி-பெங்களூரு புல்ஸ் மற்றும் பெங்கால் வாரியா்ஸ்-யு மும்பா அணிகள் இடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
புள்ளிகள் அடிப்படையில் தில்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், எலிமினேட்டா் ஆட்டங்களில் வெற்றி பெற்ற யு மும்பா, பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
தில்லி அணி தொடக்க சுற்று ஆட்டங்களிலேயே சிறப்பான வெற்றிகளை குவித்து பலமான அணியாக விளங்குகிறது. பெங்களுரு அணி ஏற்கெனவே தில்லியிடம் 2 முறை தோல்வி கண்டுள்ளது.
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி எலிமினேட்டா் ஆட்டத்தில் யுபி யோத்தா அணியை போராடி வென்றது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணியின் ரைடா்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், தற்காப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அதே நேரம் தில்லி அணியில் ரைடிங், டிபன்டா்கள் என இரு அம்சங்களும் வலுவாக உள்ளன.
யு மும்பா-பெங்கால் வாரியா்ஸ்:
சிறப்பான ஓய்வுக்கு பின் பெங்கால் வாரியா்ஸ் அணி வீரா்கள் உற்சாகத்துடன் அரையிறுதியை எதிா்கொள்கின்றனா். அதே நேரம் எலிமினேட்டா் ஆட்டத்தில் விளையாடி ஓரே நாள் ஓய்வுடன் மும்பா அணி களமிறங்குகிறது. தொடக்க சுற்றில் தோல்விகளை கண்ட நிலையில் கடைசி 8 ஆட்டங்களில் அதிரடியாக வென்றது பெங்கால்.
அதே போல் மும்பா அணியும், தொடக்கத்தில் சரிவை சந்தித்து பின், பிளே ஆஃப்க்கு முன்பு 5 தொடா் வெற்றிகளை குவித்தது. எலிமினேட்டரில் ஹரியாணா அணியை சிறப்பாக ஆடி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதி ஆட்டங்கள்:
இரவு 7.30: தில்லி-பெங்களூரு.
இரவு 8.30: பெங்கால்-மும்பா.
இடம்: ஆமதாபாத்.