வங்கதேச வீரர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: உறுதியானது இந்தியாவுடனான டி20 தொடர்!

வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் 11 அம்ச கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வீரர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் 11 அம்ச கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வீரர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். 

வங்கதேச டி20 அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் அணி கேப்டன் மஹ்முத்துல்லா, முஷ்பிகுர் ரஹீம் உள்பட 50 வீரர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் 11 அம்ச கோரிக்கைகளாக முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு, அதிகரிக்கப்பட்ட பயணப்படி, வங்கதேச கிரிக்கெட் லீக்கை வர்த்தக முறையில் மாற்ற வேண்டும், மத்திய ஒப்பந்த ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், டாக்கா ப்ரீமியர் லீக் போட்டியில் திறந்தவெளி சந்தையில் வீரர்களை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டது.

இதனால், வரும் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இடையே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது. இதில், பங்கேற்பதற்கு சற்று முன்னதாக வங்கதேச வீரர்கள் தரப்பில் புதிதாக 2 கோரிக்கைகளும் சேர்க்கப்பட்டது.

அவை வங்கதேச கிரிக்கெட் வாரிய வருவாயின் குறிப்பிட்ட சதவீத்தை வீரர்களுடனும், அதே அளவிலான தொகையை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுடனும் பகிர வேண்டும் என்பனவாகும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வங்கதேச வீரர்கள் தொடக்கத்தில் வைத்த 11 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் பாபோன் கூறுகையில், "பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. வீரர்கள் முன்வைத்த 11 அம்ச கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக சேர்க்கப்பட்ட 2 புதிய கோரிக்கைகள் குறித்து தகவல் தெரியாது" என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், "பாபோன் (வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர்) கூறியதுபோல் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. எங்களுடைய கோரிக்கைகள் கூடிய விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவரும், வாரியத்தின் மற்ற இயக்குநர்களும் உறுதியளித்துள்ளனர். அவர்களது உத்தரவாதத்தின் அடிப்படையில் நாங்கள் தேசிய கிரிக்கெட் லீக்கில் விளையாடவுள்ளோம். கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளோம்" என்றார்.

இதன்மூலம் இந்தியா, வங்கதேச அணிகளுக்கிடையிலான டி20 தொடர் எந்தவித சிக்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com